டெல்லி: கடந்த 2003ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டுவரை மாநிலங்களவை உறுப்பினராக சந்தன் மித்ரா இருந்தார். அவருக்கு வயது 65. இவர், கடந்த 2018ஆம் ஆண்டு பாஜகவில் இருந்து விலகி அனைந்திந்திய திருணாமூல் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.
சந்தன் மித்ரா மறைவு குறித்து அவரது மகன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்," நீண்ட நாள்களாக உடல்நலம் சரியில்லாமல் இருந்தார். அவர் நேற்றிரவு (செப். 1) காலமானார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மோடி இரங்கல்
சந்தன் மித்ராவின் மறைவிற்கு பல அரசியல் தலைவர்கள், அரசியல் செயல்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில்,"சந்தன் மித்ரா அவரது அறிவாற்றல், நுண்ணறிவு ஆகியவற்றால் நினைவுகூரப்படுவார். அவர் அரசியல், ஊடக உலகில் தன்னை வேறுபடுத்திக் கொண்டு வாழ்ந்தவர். அவரது மறைவால் வேதனையடைகிறேன். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
நண்பனை இழந்தேன்
மற்றொரு, பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஸ்வபன் தாஸ்குப்தா வெளியிட்டுள்ள ட்வீட்டில்,"நான் எனது நெருங்கிய நண்பரும், முன்னோடியுமான முன்னாள் எம்.பி., சந்தன் மித்ராவை இழந்துள்ளேன்.
நாங்கள் ஒரே நேரத்தில் பத்திரிகைத் துறையில் சேர்ந்தோம். இந்தியாவின் காவி அலை குறித்தும், அயோத்தி குறித்தும் உற்சாகமாக உரையாடியுள்ளோம்" எனக் கூறியுள்ளார்.
மேலும், 1972ஆம் ஆண்டு தனது பள்ளிப்பருவத்தில் சந்தன் மித்ராவுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்து தனது வருத்தத்தையும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: உரிமமின்றி துப்பாக்கி வைத்திருந்த 5 பேர் கைது